Friday, August 19, 2011

ஹே கிருஷ்ணா!!!

தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கான நாள். எதிரிகளை வெல்ல உகந்த நாள். நீ பிறந்த நாளுங்கூடத்தான். என்னை, என் போன்ற மனிதர்களை எதிரிகளிடமிருந்து காக்கத்தான் நீ பிறந்தாயா கண்ணா?

நூறு கௌரவர்களாக, நூறு விதமான தீய எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன - கோபமாக, குரோதமாக, உச்சகட்ட வெறுப்பாக, பேராசையாக, ஆங்காரமாக, அகங்காரமாக இன்ன பிற துர்குணங்களாக - என்னை வேட்டையாட எந்நேரமும் தயாராக உள்ளன. என்னுடைய, பிறருடைய தீய எண்ணங்களால், சொற்களால், செயல்களால் துகிலுரியப்பட்ட திரௌபதியாக என் ஆன்மா நிற்கும்பொழுது என்னை காக்கத்தான் நீ அவதரித்தாயா கண்ணா? இவை மட்டும் தான் என் எதிரிகளா?

எனக்கென்னவோ பாண்டவர்களிடமிருந்தும் இந்த பாஞ்சாலியை நீ காக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கதைப்படி பாண்டவர்கள் பாஞ்சாலியின் கணவர்கள்தான்; நல்லவர்கள்தான். ஆனால் அவர்களும் ஒருவித தளைதான்; எதிரிகள்தான்.

நான் தர்மம் தவறவில்லை என்ற எண்ணமே தர்மன், தொழில் சார்ந்த நுண்ணறிவு அர்ஜுனன்; உடல் பலம் பீமன். அன்பும், ஆற்றலும், அழகும் நகுல சஹாதேவர்கள்; நகுலன் அன்பிலும் அழகிலும் மதனுக்குச் சமமானவன்; சகல உயிர்களிடமும் அன்பு கொண்டவன். சஹாதேவேன் மிகச்சிறந்த சோதிடன், எதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவன்.

ஒருவர் தர்மப்படி நடக்கவேண்டும்; செய்யும் தொழிலில் கவனமும் கூர்த்த அறிவும் கொண்டிருக்கவேண்டும்; உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்; சகல உயிர்களிடமும் அன்பு கொண்டிருக்கவேண்டும், எதிர்காலத்தை கணித்து தன் செயல்திட்டங்களை வகுக்க தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் நல்லவைதானே? ஆன்மாவை, வாழ்வை நல்லவிதமாக வழி நடத்துபவை தானே? இவை எப்படி எதிரியாக முடியும்?

ஆனால், சபையின் முன் பாஞ்சாலி கொணர்ந்து நிறுத்தப்பட இவையே காரணம். நல்லவை என்று நாம் நினைப்பதை இறுக கட்டிக்கொண்டு, நல்லவராக இருப்பதாக எண்ணி கர்வப்பட்டு அலட்டி, தேவையற்ற தளைகளில் சிக்கி, தீய எண்ணங்கள் பலம் பெற்ற ஒரு வேளையில் சருக்குவதே ஆன்மாவின் துன்பங்களுக்கு காரணம். எனவே கிருஷ்ணா, நல்லவற்றிலிருந்தும், நான் நல்லவை என்று நினைப்பவற்றிலிருந்தும் என்னை காப்பாற்று ஐயனே!!!

ஏழு பிள்ளைகளை சாகக்கொடுத்துவிட்டு, எட்டாவது பிள்ளையான உன்னையும் இன்னொருத்தியிடம் கொடுத்துவிட்டு தபஸ்வினி போல வாழ்வு நடத்திய தேவகியின் துணிவு கொடு ஐயனே!!! தேவகிக்காவது, நீ எங்கோ உயிரோடு இருக்கிறாய் என்ற திருப்தி, அதன் பின் புகழோடு இருக்கிறாய் என்ற நிறைவு!!! வசுதேவர் என்ற ஞானியுடன் வாழ்ந்த நிறைவு!!! இவை யாவும் இல்லையெனினும், அவள் அமைதியாகத்தான் இருந்திருப்பாள்... அலட்டாமல்தான் இருந்திருப்பாள்... இறந்திருப்பாள்... என்று தோன்றுகிறது!!! எதிரிகளை மாய்க்கப்பிறந்த மாமன்னனின் அன்னை அல்லவா!!!

எட்டு பிள்ளைகளை எமனுக்கு அளித்த என் மீதும் கருணை கொண்டு என் எதிரிகளையும் களைந்து என்னைக்காப்பாய் என் ஐயனே!!!

No comments: